நான் குடிபோதையில் இல்லை: வதோதரா சம்பவத்தில் கைதானவர் பேட்டி

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நான் சந்திக்க விரும்புகிறேன். இது என் தவறு...
நான் குடிபோதையில் இல்லை: வதோதரா சம்பவத்தில் கைதானவர் பேட்டி
1 min read

குஜராத் வதோதராவில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் பெண் ஒருவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது கார் இடித்ததில் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் பலியானார். இரு சக்கர வாகனங்கள் மீதும் கார் மோதியதில் ஒரு குழந்தை உள்பட எட்டு பேர் காயமடைந்தார்கள்.

காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள கார் ஓட்டுநர் ரக்‌ஷித் ரவிஷ் சௌராசியா, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தனது கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதுவதற்கு முன்பு, தான் குடிபோதையில் இல்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

"நாங்கள் ஸ்கூட்டிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் வலதுபுறம் திரும்பினோம். அந்தச் சாலையில் ஒரு பள்ளம் இருந்தது. நாங்கள் வலதுபுறம் திரும்பியபோது ஒரு வாகனம் மீது கார் லேசாக உரசியது. இதனால் காரில் இருந்த ஏர் பேக் திடீரென திறந்துவிட்டது. இதன் காரணமாக எங்கள் பார்வை தடைபட்டது. கார் தன் கட்டுப்பாட்டை இழந்தது என்றார் ரக்‌ஷித் ரவிஷ் சௌராசியா.

காரை 50 கிமீ வேகத்தில் ஓட்டினேன். குடிபோதையில் இல்லை. அப்போது சாலையில் காரும் ஸ்கூட்டியும் மட்டுமே இருந்தன. மக்கள் யாரும் இல்லை. நான் எந்தவொரு பார்ட்டிக்கும் செல்லவில்லை, ஹோலிகா தஹன் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இந்த விபத்தில் ஒரு பெண் இறந்து, சிலர் காயமடைந்ததை இன்றுதான் அறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நான் சந்திக்க விரும்புகிறேன். இது என் தவறு. பாதிக்கப்பட்டவர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் அது நிச்சயம் நடக்கவேண்டும் என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வதோதரா காவல் ஆணையர் நரசிம்ஹா கோமர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்தார்கள். ஒரு பெண் இறந்துவிட்டார். பல விசாரணைக் குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம் என்று காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in