பேச அனுமதிப்பதில்லை: மக்களவைத் தலைவர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"7-8 நாள்களாக நான் பேச அனுமதிக்கப்படவில்லை. இது புதிய யுத்தியாக இருக்கிறது."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

மக்களவையில் தான் பேச அனுமதிக்கப்படுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10 அன்று தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் தான் பேச அனுமதிக்கப்படுவதில்லை என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:

"என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. என்னைப் பேச அனுமதிக்குமாறு மக்களவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், அவர் புறப்பட்டுச் சென்றார். இது அவையை நடத்தும் முறையல்ல. மக்களவைத் தலைவர் என்னைப் பேச அனுமதிக்காமல் இருக்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். என்னைப் பற்றி ஏதோ குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். அவையை ஒத்திவைத்தார். அதற்கான அவசியமே இல்லை.

நான் எப்போது பேச எழுந்தாலும், பேச அனுமதிக்கப்படுவதில்லை. நாங்கள் சொல்ல நினைப்பதை அனுமதிப்பதில்லை. நான் எதுவுமே செய்யவில்லை, அமைதியாகவே அமர்ந்திருந்தேன். ஒரு வார்த்தைகூட நான் பேசவில்லை. 7-8 நாள்களாக நான் பேச அனுமதிக்கப்படவில்லை. இது புதிய யுத்தியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு இடமே இல்லை.

அன்றைய நாள் கும்பமேளா குறித்து பிரதமர் பேசினார். அதில் சிலவற்றைச் சேர்க்க நான் விரும்பினேன். வேலைவாய்ப்பு குறித்து பேச விரும்பினேன். ஆனால், நான் அனுமதிக்கப்படவில்லை. மக்களவைத் தலைவரின் அணுகுமுறை என்ன என்பது தெரியவில்லை. ஆனால், நாங்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. இது ஜனநாயகமற்ற செயல்பாடாகும்" என்றார் ராகுல் காந்தி.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைப்பதற்கு முன்பு கூறுகையில், "அவை உறுப்பினர்களின் நடவடிக்கை நடத்தை அவையின் மாண்பைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு சம்பவங்கள் என் பார்வைக்கு வந்துள்ளன. இந்த அவை தந்தை-மகள், தாய்-மகள் மற்றும் கணவன்-மனைவி ஆகியோரையெல்லாம் உறுப்பினர்களாகப் பார்த்துள்ளது. விதி எண் 349-க்கு உள்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in