
வக்ஃபு சொத்துகள் நிர்வகிக்கப்படுவதை நெறிப்படுத்தவும், அதில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்கவும், பாரம்பரிய இடங்களை பாதுகாக்கவும், சமூக நலனை மேம்படுத்துவதற்காவும், நேற்றைக்கு (ஏப்ரல் 2) முந்தைய தினம் வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மசோதா மீது நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது. அதன்பிறகு ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் நள்ளிரவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை, மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர்களின் கருத்துகளைப் பெற்று, கூட்டுக்குழு உறுப்பினர்களுக்கு இடையே விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பிறகே சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக கிரண் ரிஜிஜு பேசினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மசோதா மீது 12 மணி நேரத்திற்கும் மேலாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பி.க்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக கூட்டணி எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
மேலும், சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்களான மூ. தம்பிதுரை, சி.வி. சண்முகம், ஆர். தர்மர், என். சந்திரசேகரன் ஆகியோரும் வாக்களித்தனர். ஜி.கே. வாசன் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார். அதேநேரம், பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பிவைக்கப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த தேதியில் இருந்து, சட்டம் அமலுக்கு வரும்.