விவிபேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில், “அனைத்து விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது” என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

விவிபேட் ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.

வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும் போது, தான் பதிவு செய்த சின்னத்தில் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை காட்டும் கருவியாக விவிபேட் இயந்திரம் அமைந்துள்ளது. இந்நிலையில் நீண்ட நாள்களாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள விவிபேடின் ஒப்புகைச் சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

ஒருவேளை வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறுதலாக வேறு சின்னத்துக்கு தங்களுடைய ஓட்டு விழுந்திருந்தால் வாக்காளர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்க முடியும். தற்போதைய நடைமுறைப்படி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என ஜனநாயக சீர்திருத்த அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில், “அனைத்து விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணும் பட்சத்தில் மனித தவறுகள், பாரபட்சம் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு எண்ணுவது சாத்தியமற்றது” என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 18 அன்று நடைபெற்ற விசாரணையில் விவிபேட் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.

முன்னதாக, விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு, சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in