வருண் காந்தி எங்களுடன் இணைந்தால் வரவேற்போம்: காங்கிரஸ்
பாஜகவில் தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்ட வருண் காந்தி எங்கள் கட்சிக்கு விரும்பி வந்தால் வரவேற்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்து வருகிறார் வருண் காந்தி. வரும் மக்களவைத் தேர்தலில் இவருக்கு தேர்தல் டிக்கெட் வழங்க பாஜக தலைமை மறுத்துவிட்டது.
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆதிர்ரஞ்சன் செளதுரி, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசுகையில், வருண் காந்தி காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பினால் அதை வரவேற்போம். 44 வயதான வருண் காந்தி, காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வருண் காந்தி படித்த, அறிவுள்ள ஒரு நல்ல அரசியல்வாதி, அவர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என்று செளதுரி கூறினார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை ஐந்து கட்டங்களாகத் தலைமை வெளியிட்டுள்ளது. வருண் காந்தியின் தாயார் மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ள போதிலும் வருண் காந்திக்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்படவில்லை.
வருண்காந்திக்கு பதிலாக 2021-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் சேர்ந்த ஜிதின் பிரசாத்துக்கு பிலிபிட் தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
வருண் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை அடிக்கடி கடுமையாக விமர்சித்து வந்தார். இதன் காரணமாகவே அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும் தமக்கு தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டது குறித்து வருண் காந்தி இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.