அமெரிக்க துணை அதிபர் இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை!

இறக்குமதி வரியை முன்வைத்து அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை!
ANI
1 min read

அமெரிக்காவின் 50-வது துணை அதிபராகப் பதவியேற்ற பிறகு, அரசு முறைப் பயணமாக முதல்முறையாக குடும்பத்துடன் இந்தியாவிற்கு ஜே.டி. வான்ஸ் வருகை தந்துள்ளார். இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, வர்த்தக ஒப்பந்தத்தை அவர் இறுதிசெய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தில்லி பாலம் விமான நிலையத்திற்கு மனைவி உஷா வான்ஸ், 3 குழந்தைகள் சகிதமாக இன்று ஜே.டி. வான்ஸ் வருகை தந்தார். மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். துணை அதிபரின் 3 குழந்தைகளும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

வான்ஸின் வருகையை ஒட்டி, தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவத் தலைமையகம் மற்றும் உள்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் நான்கு நாள் பயணமாக அவருடன் வந்துள்ளனர். தில்லியைத் தொடர்ந்து, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூருக்கு அவர் பயணிக்கவுள்ளார்.

பிரதமர் மோடியுடன் இன்று (ஏப்.21) மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள வான்ஸ் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

இறக்குமதி வரியை முன்வைத்து அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் அமெரிக்காவின் நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

தில்லியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியான ஐடிசி மௌரியா ஷெராட்டன் குடும்பத்தினருடன் தங்கியுள்ள துணை அதிபர் வான்ஸ், முதல் பயணமாக தில்லி சுவாமிநாராயண் அக்‌ஷர்தாம் கோயிலுக்குச் சென்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in