கரு முட்டைகளைச் சேமித்து வையுங்கள்: விவாதத்தைக் கிளப்பிய ராம் சரணின் மனைவி உபாசனா | Upasana Konidela |
பெண்கள் கரு முட்டைகளைச் சேமித்து வைத்து எப்போது வேண்டுமோ அப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், இதுகுறித்து சமூக ஊடகத்தில் அவர் பதிலளித்துள்ளார்.
நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா, அப்போலோ மருத்துவமனையின் சிஎஸ்ஆர் துறையின் துணைத் தலைவராகவும் தொழில்முனைவோராகவும் உள்ளார். அவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் ஐஐடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய காணொளி ஒன்றைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், தனது வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் பற்றியும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி தங்களுக்கான குறிக்கோளையும் அடையவும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் பேசியிருந்தார். அப்போது, பெண்களிடம் உங்களுடைய கருமுட்டையை உறைய வைத்து உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். பொருளாதாரரீதியாக யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்ற நிலை வந்த பிறகு திருமணம் செய்யுங்கள்” என்று கூறியிருந்தார்.
உபாசனாவின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. பெண்கள் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டியது திருமண வாழ்க்கையா? பணி வாழ்க்கையா என்று விவாதங்களும் கிளம்பின. இதையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவையும் அவர் வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
“ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டியதற்கு மகிழ்கிறேன். நீங்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் கருத்துகளுக்கு நான் பதில் அளிக்கிறேன். காதல் மற்றும் தோழமைக்காக நான் 27 வயதில் திருமணம் செய்து கொண்டேன். என் சொந்த விருப்பப்படி நான் இந்த முடிவை எடுத்தேன். 29 வயதில், தனிப்பட்ட மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக என் கருமுட்டைகளை உறைய வைக்க முடிவு செய்தேன். 36 வயதில் முதல் குழந்தையைப் பெற்றேன். இப்போது 39 வயதில் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்னுடைய வேலை தொடர்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நான் சம அளவில் முக்கியத்துவம் அளித்துள்ளேன். ஏனெனில் ஒரு குடும்பம் வளரும்போது மகிழ்ச்சியான நிலையான சூழல் மிகவும் முக்கியமானது. எனக்கு திருமணமா, தொழிலா என்ற போட்டி அல்ல. இரண்டும் சமமானவை. அவை நிறைவான வாழ்க்கையின் அர்த்தமுள்ள பகுதிகள். ஆனால் அது எப்போது நடக்க வேண்டும் என்ற காலத்தை நான் தீர்மானிக்கிறேன். அது சலுகை அல்ல, என் உரிமை!" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு பெண் சமூக அழுத்தத்திற்கு பணிந்து காதல் திருமணம் செய்து கொள்வது தவறா? சரியான துணை கிடைக்கும்வரை காத்திருப்பது தவறா? ஒரு பெண் தன் சொந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் எப்போது குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது தவறா? ஒரு பெண், திருமணம் அல்லது குழந்தைகளைப் பெறுவது பற்றி மட்டும் யோசிப்பதைவிட, தனது இலக்குகளை நிர்ணயித்து, வேலையிலோ தொழிலிலோ கவனம் செலுத்துவது தவறா?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Actor Ram Charan's wife Upasana Konidela has responded to the controversy over her statement that women should store their eggs and have children whenever they want, on social media.
