3 வயது குழந்தையைக் கொன்ற ஓநாய்: உ.பி.யில் மக்கள் பீதி

3 வயது குழந்தையைக் கொன்ற ஓநாய்: உ.பி.யில் மக்கள் பீதி

மஹசி மக்களின் புகாரை அடுத்து உ.பி. வனத்துறையினர் `ஆபரேஷன் பேடியாவைத்’ தொடங்கி ஓநாய்களைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்
Published on

கடந்த சில நாட்களாக மஹசி மக்களை அச்சுறுத்து வந்த ஓநாய்களைப் பிடிக்க உ.பி. வனத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில், 3 வயது குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் மஹசி தாலுகாவைச் சேர்ந்த வனப்பகுதியில் இருந்த 6 ஓநாய்கள் கடந்த சில வாரங்களாக அந்த வனப்பகுதியைச் சுற்றியிருந்த கிராமங்களில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், தாக்கியும் வந்தன. ஓநாய்களின் தாக்குதலில் கடந்த ஆகஸ்ட் 29 வரை 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

மஹசி மக்களின் புகாரை அடுத்து உ.பி. வனத்துறையினர் `ஆபரேஷன் பேடியாவைத்’ தொடங்கி ஓநாய்களைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். இதற்காக ட்ரோன் கேமராக்கள், தெர்மல் மேப்பிங் தொழில்நுட்பங்களை வனத்துறையினர் பயன்படுத்தினார்கள். மேலும் 16 குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டன.

கடந்த வார நிலவரப்படி மக்களை அச்சுறுத்திய 6 ஓநாய்களில் மொத்தம் 4 ஓநாய்களை வனத்துறையினர் பிடித்தனர். ஆனால் மீதமுள்ள 2 ஓநாய்களைக் பிடிக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த 2 ஓநாய்களும் அதன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதால் அவற்றைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (செப்.02) அதிகாலை 3.30 மணி அளவில் மஹசி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் வீடு புகுந்து, 3 வயது பெண் குழந்தையை ஓநாய் கொன்றுள்ளது.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சம்மந்தப்பட்ட கிராமத்தினர், `ஓநாய்களை நாங்கள் பல முறை பார்த்தோம். ஆனால் அது குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தால் அவர்கள் வீடியோ ஆதாரத்தைக் கேட்கின்றனர். வீடியோ எடுப்பதற்குள் அவை ஓடிவிடுகின்றன’ என்றனர். குழந்தையின் மரணத்தை அடுத்து ஓநாய்களைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறையினர் மேலும் துரிதப்படுத்தியுள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in