
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் என்ற சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியா வந்துள்ள நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
2019-ல் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நிகழும் மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு ஜம்மு-காஷ்மீர் சென்றடைந்தார். ஸ்ரீநகரில் அமித் ஷா தலைமையில் உயர்நிலை பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அமித் ஷா விளக்கம் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.
"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கனத்த இதயத்துடன் இறுதி மரியாதையைச் செலுத்தினேன். இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்துக்கு அடிபணியாது. இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சும்மா விடப்பட மாட்டார்கள்" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் அமித் ஷா பதிவிட்டார்.
பிறகு, ஹெலிகாப்டர் மூலம் பஹல்காம் சென்ற அமித் ஷா, தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டார். பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் சென்ற அமித் ஷாவிடம், அங்கிருந்த அதிகாரிகள் தற்போதைய நிலை குறித்து விவரித்தார்கள்.
இதனிடையே, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினார்கள். ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினருக்கு என்ஐஏ அதிகாரிகள் உதவவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.