
மே 1 முதல் ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் ஃபாஸ்டேக் சுங்க கட்டண வசூலிப்பு முறையில் மாற்றம் கொண்டுவரும் வகையில், வரும் மே 1 முதல் ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டண வசூலிப்பு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறியதாவது,
`தற்போது நடைமுறையில் உள்ள ஃபாஸ்டேக் சுங்க கட்டண முறைக்கு மாற்றாக, மே 1, 2025-ல் இருந்து செயற்கைக்கோளை (ஜிபிஎஸ்) அடிப்படையாக வைத்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மே 1, 2025 தொடங்கி, நாடு தழுவிய அளவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை செயல்படுத்துவது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமோ அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ, எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், வாகனங்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைத்து சுங்கச்சாவடிகளில் தங்கு தடையின்றி செல்வதை உறுதிசெய்யும் வகையில், சில சுங்கச்சாவடிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் ஏஎம்பிஆர்-ஃபாஸ்டேக் கட்டண வசூலிப்பு முறை செயல்படுத்தப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள தகவல்களைப் பெற்று அத்துடன் பழைய ஃபாஸ்டேக் முறையில் உள்ள ரேடியோ அதிர்வெண் அடையாளத்தை இணைத்து, இந்த புதிய கட்டண வசூலிப்பு முறை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.