பிரதமர் மோடி ராஜினாமா: சனியன்று மீண்டும் பதவியேற்பு

மீண்டும் பதவியேற்கும் வரை காபந்து பிரதமராக மோடி நீடிப்பார்.
பிரதமர் மோடி ராஜினாமா: சனியன்று மீண்டும் பதவியேற்பு
ANI

17-வது மக்களவையைக் கலைக்க குடியரசுத் தலைவரிடம் மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று முழுமையாக நிறைவடைந்தது. பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வென்றுள்ளன. ஆட்சியமைப்பதற்காக தனிப் பெரும்பான்மையைப் பெறாததால், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் இன்று காலை 11 மணியளவில் கூடியது. இந்தக் கூட்டத்தில் மக்களவையைக் கலைக்க குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பிரதமர் மோடி சமர்ப்பித்தார்.

ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, பிரதமர் மற்றும் அமைச்சர்களை காபந்தாக செயல்படுமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்க கிங் மேக்கர்களாக இருக்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஒப்புதல் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி ஜூன் 8-ல் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

17-வது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 16-ல் நிறைவைடைகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக இன்று மாலை ஆலோசனை நடத்துகிறது. இதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் தில்லி விரைந்துள்ளார்கள்.

இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும் தில்லியில் நடக்கிறது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in