

2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ரூ.11,718 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் வரும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையில் அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு நடக்கும் எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027-ல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகளின் கணக்கெடுப்புப் பணிகள் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். அடுத்த கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் நடத்தப்படும். இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவரப் பணியாகக் கருதப்படுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பும் இந்த 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்படும். இது, முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பு. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகள் இரண்டிலும் செயலிகளைப் பயன்படுத்தி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள் சேகரிக்கப்படும். இந்தப் பயிற்சியில் 30 லட்சம் களப்பணியாளர்கள் ஈடுபடுவார்கள். அவர்கள் வீடு வீடாகச் சென்று பிரத்யேக கேள்வித் தாள்கள் மூலம் கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள். 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக ரூ.11,718 கோடி பட்ஜெட்டில் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என்றார்.
Union Minister Ashwini Vaishnaw says," The Cabinet has approved a budget of Rs 11,718 crores for Census 2027."