
அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஏப்.30) தில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூடியதால், இந்த கூட்டம் கவனம் பெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக அவர் விவரித்தார். மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை விமர்சித்து அவர் பேசியதாவது,
`சாதிவாரிக் கணக்கெடுப்பை காங்கிரஸ் அரசாங்கங்கள் எப்போதும் எதிர்த்து வந்துள்ளன. கடந்த 2010-ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கவேண்டும் என்று கூறினார்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்தே காங்கிரஸ் அரசாங்கம் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது. காங்கிரஸும் அதன் இண்டியா கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பை அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சில மாநிலங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை சிறப்பாக நடத்தியிருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் இருந்து வெளிப்படைத்தன்மையற்ற முறையில் இதை மேற்கொண்டன’ என்றார்.