
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு ரயில்களின் ஓட்டுனர்களும் உயிரிழந்துள்ளார்கள்.
ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்ஹெட் பகுதியில் வைத்து, இன்று (ஏப்ரல் 1) அதிகாலை 3 மணிக்கு தேசிய அனல் மின் நிறுவனத்திற்குச் (என்.டி.பி.சி.) சொந்தமான இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் இரு சரக்கு ரயில்களின் ஓட்டுனர்களும் உயிரிழந்துவிட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாஹேப்கஞ்ச் துணை டிவிஷனின் காவல் அதிகாரி கிஷோர் திர்கி தகவல் அளித்துள்ளார்.
அதேநேரம், விபத்து நடைபெற்ற ரயில் வழித்தடம் என்.டி.பி.சி.க்குச் சொந்தமானது என்றும், நிலக்கரியை மின் உற்பத்தி நிலையங்களுக்குக் கொண்டு செல்ல அந்த வழித்தடம் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாகப் பிடிஐ செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த கிழக்கு ரயில்வே மண்டலத்தின் செய்தித் தொடர்பாளர் கௌஷிக் மித்ரா, சரக்கு ரயில்களும், தண்டவாள வழித்தடங்களும் என்.டி.பி.சி. நிறுவனத்திற்குச் சொந்தமானவை. இந்திய ரயில்வேவுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்றார்.
சரக்கு ரயில்கள் விபத்துக்குள்ளான வழித்தடம், என்.டி.பி.சி. லால்மதியா எம்ஜிஆர் என்று அழைக்கப்படுகிறது. பீஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காஹல்காவுன் அனல்மின் உற்பத்தி நிலையத்தையும், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா அனல்மின் உற்பத்தி நிலையத்தையும் அது இணைக்கிறது.