வக்ஃபு திருத்தச் சட்ட வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விஜய் வரவேற்பு

உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அபிஷேக் சிங்வி அவர்களுக்கு...
வக்ஃபு திருத்தச் சட்ட வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விஜய் வரவேற்பு
1 min read

வக்ஃபு திருத்தச் சட்டத்தின் மீது மீண்டும் விசாரணை நடத்தும் வரை, சட்டத்தின் சில ஷரத்துகளை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரவேற்றுள்ளார்.

வக்ஃபு திருத்தச் சட்டம் கடந்த ஏப்ரல் 8 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் ஒன்று.

வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்றும் இன்றும் விசாரணை நடத்தியது.

இன்றைய விசாரணையின் முடிவில் அடுத்த விசாரணை நடைபெறும்வரை, திருத்தச் சட்டத்தின்படி வக்ஃபு கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், பயனாளரால் அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்படாத வக்ஃபு சொத்துகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துகள் ஆகியவற்றை மறுவகைப்படுத்துவதற்கும் நீதிபதிகள் தடை பிறப்பித்தனர். இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு 5 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மே 5-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மனுதாரர்களில் ஒருவரான விஜய், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளார்.

"வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in