ஆபாசக் காணொலி விவகாரம் கர்நாடகத்தை உலுக்கியுள்ள நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா முதன்முறையாக எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. தொடர்புடைய ஏராளமான ஆபாசக் காணொலிகள் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தக் காணொலி விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முன்பு பணிபுரிந்த பெண் பணியாளர் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கில் தேவெகௌடாவின் மகன் ஹெச்டி ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ளன. எனவே, இது பாஜகவையும் பாதித்துள்ளது. இதனிடையே, பிரஜ்வல் ஜெர்மனிக்குச் சென்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. மதச்சார்பற்ற ஜனதா தளம் இவரைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் கடவுச் சீட்டை முடக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், உண்மை விரைவில் வெல்லும் என அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரஜ்வலின் எக்ஸ் தளப் பதிவு:
"நான் பெங்களூருவில் இல்லை. எனவே, என்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது. இதுதொடர்பாக, எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடியிடம் தகவல் தெரிவித்துள்ளேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பிரஜ்வல் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.