பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்ததால் நிகழப்போகும் சரிவு!

"பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்கியது உலகுக்கு தவறான செய்தியைச் அனுப்பியுள்ளது."
பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்ததால் நிகழப்போகும் சரிவு!
ANI
1 min read

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் என்ற சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியா வந்துள்ள நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

அண்மைக் காலமாகவே ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024-ல் ஏறத்தாழ 65,452 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளதாகத் தரவுகள் சொல்கின்றன.

கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, 2024-ல் 2.3 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்ததாக் தரவுகளைப் பகிர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத் துறை தரவுகளின்படி, சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன்பு 2018-ல் 1.6 கோடி பேர் ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார்கள். இவர்களில் 8.3 லட்சம் பேர் காஷ்மீர் சென்றுள்ளார்கள்.

இதுவே கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் 2023-ல் 2 கோடிக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார்கள். காஷ்மீருக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 27 லட்சம்.

கோடைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகளவில் இருக்கும் என்பது உள்ளூர்வாசிகளின் தகவலாக உள்ளது. தற்போது நிகழ்ந்துள்ள இந்தத் தாக்குதல் காரணமாக, அடுத்த 4-5 மாதங்களில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த சுற்றுலாத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியில் இயங்கி வரும் டிராவல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கில ஊடகங்களில் பேட்டியளித்து வருகிறார்கள்.

தாக்குதல் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால், அடுத்த 10 நாள்களுக்கான பயணத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதாக ஸ்கைலிங்க் பிரைவட் லிமிடெடைச் சேர்ந்த ஆஷிஷ் சர்மா என்பவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்துக்கான அனைத்து சுற்றுலா முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஹேங்க் அவுட் ஹாலிடேஸைச் சேர்ந்த பஷீர் என்பவர் தெரிவித்துள்ளார்.

லே டிராவல்வோர்ல்ட் நிர்வாக இயக்குநர் சஞ்சய் டங் கூறுகையில், "காஷ்மீரில் பயங்கரவாத சூழல் இருக்கிறது என்கிற விஷயத்தை மக்கள் மறந்துவிட்டார்கள். நிலைமை முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகளவில் இருக்கிறது. இதன் காரணமாக, நிறைய புதிய விடுதிகள் திறக்கப்பட்டன. தற்போது இந்தத் தாக்குதல் காரணமாக, புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கி வந்தவர்கள் தங்களுடையத் திட்டத்தை மாற்ற நேரிடும். பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்கியது தவறான செய்தியை அனுப்பியுள்ளது. வரும் நாள்களில் நிறைய பயணங்கள் ரத்தாகக் கூடும்" என்றார் அவர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சுற்றுலாப் பயணிகள் வரத்தை நேரடியாகப் பாதிப்பதன் மூலம், ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரமும் தாக்கத்தைச் சந்திக்கவுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in