பிரதமர் மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், இது குறித்து சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் ஹிந்தியில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தொடர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு இணைப்பை துண்டித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? மிரட்டல் விடுத்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.