அமெரிக்காவில் வசித்து வரும் ஹெச்-1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டதாக ஸோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை அழைத்துப் பணியமர்த்த நிறுவனங்கள் ஹெச்-1பி விசா திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் அதிகளவில் இந்தியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஹெச்-1பி விசா திட்டத்தில் கடந்தாண்டு ஒப்புதல் பெற்றவர்களில் ஏறத்தாழ 71 சதவீதத்தினர் இந்தியர்கள் என்கிறது தரவு.
ஹெச்-1பி விசா திட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நபர் ஒருவருக்கு ஆண்டுக் கட்டணமாக 1 லட்சம் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை முடிவு செய்து அறிவித்தார். செப்டம்பர் 21 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவில் இந்தியர்களிடையே பெரும் குழப்பம் வெடித்தது. மெடா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வெளியே இருந்தால், உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டும் என உத்தரவிட்டன. டிரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் ஹெச்-1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது என ஹோஸோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இதைச் சொல்வதற்கு வருத்தமாகவே உள்ளது. ஆனால், அமெரிக்காவில் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு இதுவே சரியான நேரமாக இருக்கலாம். நாடு திரும்புங்கள். உங்களுடைய வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்ய 5 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், அது உங்களை வலிமையாக்கும். அச்சத்தில் வாழ வேண்டாம். துணிச்சலான முடிவை எடுங்கள். நீங்கள் நன்றாகவே செயல்படுவீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஹெச்-1பி விசாவுக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே புதிய நடைமுறை பொருந்தும் என அமெரிக்க அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
"இது ஆண்டுக் கட்டணம் கிடையாது. ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படும் விண்ணப்பக் கட்டணம்.
ஹெச்-1பி விசாவை ஏற்கெனவே வைத்திருப்பவர்கள், தற்போதைய நிலையில் அமெரிக்காவுக்கு வெளியே இருந்தால், அவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படாது.
ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் வழக்கம்போல அமெரிக்காவைவிட்டு வெளியேறலாம், திரும்பவும் அமெரிக்காவுக்குள் வரலாம்.
இந்த நடைமுறையானது புதிதாக விசா விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே. ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கும் விசாவை புதுப்பிப்பவர்களுக்கும் இது பொருந்தாது.
அடுத்த லாட்டரி சுழற்சி முறையிலேயே முதல்முறையாக இது அமல்படுத்தப்படும்" என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Sridhar Vembu | H-1B Visa | H-1B |