அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான தேர்தல் இது: ராகுல் காந்தி

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான தேர்தல் இது: ராகுல் காந்தி

"அரசியலமைப்புச் சட்டம் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்துவது யார் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்."
Published on

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலானது ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் 4.31 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா மற்றும் கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் ஆகியோரை எதிர்த்துக் களம் காண்கிறார்.

கேரளத்தில் ஏப்ரல் 26-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாள். இந்த நிலையில், ஆனி ராஜா மற்றும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:

"ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல் இது. ஒருபுறம் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழிக்க நினைக்கிறது ஒரு கூட்டம். மறுபுறம் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காக்க நினைக்கிறது ஒரு கூட்டம். யார் எந்தப் பக்கம் என்பது உங்களுக்கே தெளிவாகத் தெரியும். அரசியலமைப்புச் சட்டம் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்துவது யார் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்" என்றார் ராகுல் காந்தி.

முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு ராகுல் காந்தி பேரணியில் ஈடுபட்டார். இதில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், தீபா தாஸ்முன்ஷி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in