
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு, முதல்முறை பொதுவெளியில் எதிர்வினையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளுக்கும், சதிச்செயலைத் திட்டமிட்டவர்களுக்கும், கற்பனைக்கு எட்டாத வகையில் தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பிஹார் மாநிலம் மதுபனியில் நடைபெற்ற அரசு விழாவில் இன்று (ஏப்.24) பங்கேற்று முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய வளர்ச்சிப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து, விழாவுக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில் ஹிந்தியில் உரையாற்றத் தொடங்கிய பிரதமர் மோடி, ஒரு கட்டத்தில் ஆங்கிலத்திற்கு மாறி, தனது ஆன்மாவைத் தாக்க முயற்சிப்பவர்களை இந்தியா ஒருபோதும் விட்டுவைக்காது என்று சூளுரைத்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கூறியதாவது,
`இன்று பிஹார் மண்ணில் இருந்து ஒட்டுமொத்த உலகத்திற்கும் தெரிவிக்கிறேன். ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, இந்தியா தண்டிக்கும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பின்தொடர்வோம்.
இந்தியாவின் ஆன்மா ஒருபோதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படாது. பயங்கரவாதத்திற்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்படும். நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதில் ஒட்டுமொத்த தேசமும் உறுதியாக உள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் இருக்கின்றனர்.
பயங்கரவாதிகள் இதுவரை நினைத்துப் பார்த்திடாத வகையில் தண்டனை குறிப்பிடத்தக்கதாகவும் கடுமையானதாகவும் இருக்கும்’ என்றார்.