
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஸின்பாதெர் கெல்லர் பகுதியில், இந்திய பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில், குறைந்தது மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ல் மேற்கொள்ளப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்று நம்பப்படும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் அடில் உசேன் தோக்கர், அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா ஆகியோர் குறித்து `பயங்கரவாதமற்ற காஷ்மீர்’ என்று தலைப்பிட்ட சுவரொட்டிகள் பாதுகாப்புப் படைகள் சார்பில் ஒட்டப்பட்டன.
அடில் உசேன் தோக்கர் அட்டாரி-வாகா எல்லையைக் கடந்து, 2018-ல் பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும், கடந்தாண்டு காஷ்மீர் பகுதிக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
தேடப்படும் பயங்கரவாதிகள் குறித்து நம்பகத்தன்மைகொண்ட தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு சன்மானமாக ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என்று சுவரொட்டியில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஷோபியான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்த நிகழ்வு நடந்து சில மணிநேரத்திலேயே ஷோபியான் மாவட்டத்தின் கெல்லர் காட்டுப்பகுதியில் பகுதியிருந்த பயங்கரவாதிகளைக் குறிவைத்து பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டன. இதில் குறைந்தது மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், உள்ளூர்வாசியான ஷாஹித் என்பவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.