பயங்கரவாதிகள் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் பாகிஸ்தானில் இறுதிச்சடங்கு!

மசூத் அஸார் உள்பட ஏராளமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளித்துள்ளது; ஆதரங்களை தந்த பிறகும்கூட பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.
பயங்கரவாதிகள் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் பாகிஸ்தானில் இறுதிச்சடங்கு!
2 min read

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களுக்கு பாகிஸ்தான் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்துள்ளதாக மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல், அதற்கு இந்தியா அளித்த பதிலடி தொடர்பாக இன்று (மே 8) மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

முதலில், கர்னல் சோஃபியா குரேஷி ஹிந்தியிலும், விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆங்கிலத்திலும் நேற்றிரவு (மே 7) நடைபெற்ற பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக கூறியதாவது,

`மே 7-ம் தேதி இரவில், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உபயோகித்து இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த ராணுவ நிலைகளை மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அம்ருத்சர், கபுர்தலா, நல், ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், ஃபலோடி, உத்தர்லை, பூஜ் ஆகிய இடங்கள் இதில் அடக்கம்.

இந்த தாக்குதல்களை இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன. அவற்றில் எஞ்சியிருக்கும் உதிரி பாகங்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன; இதன் மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (மே 8) காலை, பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் இருந்த வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் இந்திய பாதுகாப்புப் படைகள் குறிவைத்தன. பாகிஸ்தான் மேற்கொண்டதைப் போலவே இந்தியாவின் தாக்குதலும் இருந்தது.

இதில், லாகூரில் இருந்த வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு கோட்டிற்கு அருகே உள்ள ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், ரஜோரி செக்டார்களில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திவரும் துப்பாக்கிச்சூடுகளின் வீரியம் அதிகரித்துள்ளது.

16 அப்பாவி மக்கள் இதில் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பெண்களும், 5 குழந்தைகளும் அடக்கம். பிரச்னை மேலும் தீவிரமடைவதை தடுப்பதற்கான பொறுப்பு  இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு உள்ளது; ஆனால் அதற்கு பாகிஸ்தான் ராணுவமும் முன்வரவேண்டும்’ என்றனர்.

இதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது,

`இரு தரப்பு தாக்குதல்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதல்தான் இந்த பிரச்னையின் தொடக்கப்புள்ளி. பயங்கரவாதிகளை குறிவைத்துதான் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் பாகிஸ்தானில் இறுதிச்சடங்கு நடந்துள்ளது.

இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியது பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கான கண்டன அறிக்கையை ஐநா சபை தயாரித்தது. ஆனால் அதில் டி.ஆர்.எஃப். (பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு) அமைப்பின் பெயரை சேர்க்கக்கூடாது பாகிஸ்தான் வலியுறுத்தியது.

மசூத் அஸார் உள்பட ஏராளமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளித்துள்ளது. பிரச்னையைப் பெரிதாக்க பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. நாங்கள் அதற்கு பதிலடி கொடுத்துவருகிறோம். இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே; பொதுமக்களை அல்ல.

ஆதரங்களை தந்த பிறகும்கூட பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in