
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மே 15 வரை 32 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, மே 7 முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக மே 8 மற்றும் மே 9 இரவுகளில் பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மட்டுமில்லாமல் மேற்கு எல்லைப் பகுதிகளிலுள்ள மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகியவையும் குறிவைக்கப்படுகின்றன. இந்தியப் படைகள் தொடர்ந்து பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்கி அழித்து வருகின்றன.
ஜம்மு-காஷ்மீரில் நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதலால் குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்து வருகின்றன. உயிர்ச் சேதமும் இந்தியா தரப்பில் ஏற்படுகிறது. பஞ்சாபில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தார்கள்.
இத்தகையச் சூழல்கள் காரணமாக மேற்குப் பகுதியிலுள்ள மாநிலங்களில் சில விமான நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் மூடப்பட்டுள்ளன. மே 10 அன்று காலை வெளியான செய்திக் குறிப்பின்படி, மே 9 முதல் மே 15 அதிகாலை 5.29 மணி வரை 32 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் இயங்கினாலும் மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படாது.
மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 32 விமான நிலையங்கள்
ஆதம்பூர்
அம்பாலா
அமிரித்சர்
அவந்திபூர்
பதிண்டா
புஜ்
பிகானெர்
சண்டிகர்
ஹல்வாரா
ஹிண்டன்
ஜெய்சால்மெர்
ஜம்மு
ஜாம்நகர்
ஜோத்பூர்
கண்ட்லா
கங்க்ரா (கக்கல்)
கெஷோத்
கிஷன்கர்
குலு மனாலி
லெ
லுதியானா
முந்த்ரா
நலியா
பதன்கோட்
பட்டியாலா
போர்பந்தர்
ராஜ்கோட் (ஹிரசர்)
சர்சவா
ஷிம்லா
ஸ்ரீநகர்
தோய்ஸ்
உட்டர்லாய்