எஸ்சி வகுப்பினரை வகைப்படுத்தி இடஒதுக்கீடு: தெலங்கானா அரசிதழில் வெளியீடு!

"புரட்சிகரமான இம்முடிவை இந்தியாவில் அமல்படுத்திய முதல் மாநிலம் தெலங்கானா."
எஸ்சி வகுப்பினரை வகைப்படுத்தி இடஒதுக்கீடு: தெலங்கானா அரசிதழில் வெளியீடு!
1 min read

தெலங்கானாவில் பட்டியலினத்தில் உள்ள சமூகங்கள் மூன்றாக வகைப்படுத்தி வழங்கப்படும் இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பட்டியலினத்தில் மொத்தம் 59 சமூகங்கள் உள்ளன. அந்த மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு 15%.

இந்தப் பட்டியலில் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் மிகவும் பின்தங்கியவர்களாகக் கண்டறியப்பட்ட சமூகங்கள் என 15 சமூகங்கள் உள்ளன. பட்டியலினத்தவர்களின் மொத்த மக்கள்தொகையில் இந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் 3.288% பேர். இவர் முதல் வகையாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

இரண்டாவது பிரிவில் 18 சமூகங்கள் இடம்பெறவுள்ளன. இந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியலினத்தில் மொத்த மக்கள்தொகையில் 62.748% பேர். இவர்களுக்கு 9% இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

மூன்றாவது பிரிவில் 26 சமூகங்கள் உள்ளன. இவர்கள் பட்டியலின மக்கள்தொகையில் 33.963% ஆக உள்ளார்கள். இவர்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்புடைய சட்டம் தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அம்மாநில ஆளுநர் கடந்த 8 அன்று ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்தச் சட்டம் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்புடைய அமைச்சரவை துணை கமிட்டியில் இடம்பெற்றிருந்த அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, "2026 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பட்டியலினத்தவர்களின் மக்கள்தொகை அதிகரித்திருந்தால், அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படும்" என்றார்.

"புரட்சிகரமான இம்முடிவை இந்தியாவில் அமல்படுத்திய முதல் மாநிலம் தெலங்கானா. வரலாறு படைத்ததில் அனைவரும் பெருமை கொள்கிறோம்" என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in