
பெங்களூருவில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் மற்றும் பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.
டிசிஎஸ் உலக 10கே மாரத்தான் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கலந்துகொண்டார். மாரத்தான் போட்டி நடைபெற்ற சாலைகள் முழுக்க குண்டும் குழியுமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி பெங்களூருவுக்கான பொறுப்பு அமைச்சர் டிகே சிவகுமார் மற்றும் பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத் ஆகியோருக்கு பகிரங்கமாகக் கடிதம் எழுதியுள்ளார் தேஜஸ்வி சூர்யா. இவர்கள் இருவரும் தான் மாரத்தான் போட்டியைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
"இந்தக் கடிதத்தை நான் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் எழுதவில்லை. ஒரு குடிமகனாகவும் ஏமாற்றமடைந்த போட்டியாளராகவும் இதைப் பேசுகிறேன்.
எல்லா இடங்களும் குண்டும் குழியுமாக இருக்கிறது. பிடிப்பு, காயங்கள் என எல்லாம் ஏற்பட்டன. சர்க்கர நாற்காலியில் வந்த போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதுதான் நம் சிபிடி சாலைகளின் உண்மை நிலை. குப்பைகள், உடைந்து கிடக்கும் நடைபாதைகள், துர்நாற்றம் வீசும் முனைகள். இது நாம் கனவு கண்ட பெங்களூரு கிடையாது. சிபிடி சாலைகள் தலைசிறந்த சாலைகளாக இருக்க வேண்டும். ஆனால், மோசமாக உள்ளன. மேடு பள்ளம் இல்லாத இடமே இல்லை. போட்டியாளர்கள் பலர் தடுமாறினார்கள். சிலருக்கு முழங்காலில் பிடிப்பு ஏற்பட்டது. சர்க்கர நாற்காலியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு வழி முழுக்க உதவிகள் தேவைப்பட்டன.
இரு மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஓடினேன். உலகத் தரம் மிக்க அனுபவம் அது. பெங்களூருவில் இன்று போட்டியாளர்கள் சிரமப்படுவதைப் பார்க்க வேதனையாக உள்ளது. துணை முதல்வர் டிகே சிவகுமார் (பொறுப்பு அமைச்சர்) மற்றும் பெங்களூரு மாநகராட்சி ஆணையர் தான் இதற்குப் பொறுப்பு. காரணங்கள் கூறுவது போதும். செயலுக்கான நேரம் இது.
மாரத்தான் போட்டிகளுக்காக மட்டுமில்லாமல் பெங்களூரு குடிமக்கள் அனைவருக்காகவும் சாலைகளை சுத்தம் செய்து சீர் செய்ய வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்துகிறேன்" என்று தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டுள்ளார்.