

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிஹாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 89 தொகுதிகளில் வென்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றது. லோக் ஜனஷக்தி (ராம்விலாஸ்) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பின்மை) 5 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
மெகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வென்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்தில் வென்றது. சிபிஐ(எம்எல்)(எல்) 2 இடங்களிலும் வென்றன.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்க, பேரவையின் மொத்த பலத்தில் குறைந்தபட்சம் 10 சதவீத தொகுதிகளையாவது கைப்பற்றியிருக்க வேண்டும். பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருப்பதால், குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இதன்மூலம், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எதிர்க்கட்சியினரால் தேஜஸ்வி யாதவ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, பிஹார் ஆளுநர் ஆரிஃப் முஹமது கானைச் சந்தித்த முதல்வர் நிதிஷ் குமார் தனது ராஜினாமாவை அவரிடம் அளித்துள்ளார். பிஹார் முதல்வராக நவம்பர் 20 அன்று 10-வது முறையாகப் பொறுப்பேற்கவுள்ளார் நிதிஷ் குமார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Rashtriya Janata Dal leader Tejashwi Yadav has been elected as the Leader of Opposition for the Bihar Legislative Assembly.
Bihar | Tejashwi Yadav | Nitish Kumar | Opposition Leader |