மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு: தமிழகத்திற்கு நிதி இல்லை!

2024-ல் வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்க ஒப்புதலிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு: தமிழகத்திற்கு நிதி இல்லை!
ANI
1 min read

2024-ல் வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். ஆனால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

அமித்ஷா தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டில் வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ஒட்டுமொத்தமாக ரூ. 1554.99 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 1554.99 கோடி நிதியில், ஆந்திர பிரதேசத்திற்கு ரூ. 608.08 கோடியும், திரிபுராவுக்கு ரூ. 288.93 கோடியும், ஒடிசாவுக்கு ரூ. 255.24 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ. 231.75 கோடியும், நாகாலாந்துக்கு ரூ. 170.99 கோடியும் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் அமித்ஷா கூறியதாவது,

`மத்திய அரசின் உதவியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ரூ. 1554.99 கோடி ஒதுக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ. 18,322.80 கோடியை விடுவித்த நிலையில், இது கூடுதல் தொகையாகும்’ என்றார்.

அதேநேரம், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கும், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கும் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ. 37 ஆயிரம் கோடி நிதியுதவி கோரியிருந்தது தமிழ்நாடு அரசு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in