
வக்ஃபு திருத்தச் சட்டத்தின் மீது மீண்டும் விசாரணை நடத்தும் வரை, சட்டத்தின் சில ஷரத்துகளை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, வக்ஃபு (திருத்தச்) சட்டம் (ஒருங்கிணைந்த வக்ஃபு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த ஏப்.8-ல் அமலுக்கு வந்தது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி, இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அது தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று (ஏப்.16) நடைபெற்றது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான் உள்ளிட்டோரும், மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் ஆஜராகினார்கள்.
விசாரணையின்போது, திருத்தச் சட்டத்தின் பல்வேறு ஷரத்துகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக, வக்ஃபு கவுன்சில் மற்றும் வாரியங்களில் வேறு மதத்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பது, பயனாளரால் அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்படாத வக்ஃபு சொத்துக்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று (ஏப்.17) பிற்பகல் 2 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது, இது தொடர்பாக அடுத்த விசாரணை நடைபெறும்வரை, திருத்தச் சட்டத்தின்படி வக்ஃபு கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், பயனாளரால் அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்படாத வக்ஃபு சொத்துகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துகள் ஆகியவற்றை மறுவகைப்படுத்துவதற்கும் நீதிபதிகள் தடை பிறப்பித்தனர். இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு 5 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு மீதான உச்ச நீதிமன்றத்தின் அடுத்த கட்ட விசாரணை மே 5-ல் நடைபெறவுள்ளது.