மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு: உச்ச நீதிமன்றம்

மசோதாக்கள் மீது முடிவெடுப்படுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து, குடியரசுத் தலைவர் தெரிவிக்கும் விளக்கம் மிகவும் அவசியமானது.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு: உச்ச நீதிமன்றம்
1 min read

மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல், காலம் தாழ்த்திவந்த ஆளுநரை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்து கடந்த 2023-ல் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு கடந்த ஏப்.8-ல் தீர்ப்பு வழங்கியது. எனினும், தீர்ப்பின் முழுமையான விவரங்கள் அடங்கிய 415 பக்க ஆவணம் நேற்று (ஏப்.11) இரவு 10.54 மணி அளவில் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த தீர்ப்பின் நகலை அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும், அனைத்து மாநில ஆளுநர்களின் முதன்மை செயலர்களுக்கு அனுப்பி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் குடியரசுத் தலைவருக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு குறித்து கூறியதாவது,

`கடந்த 2 பிப்ரவரி 2016 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிவிக்கையில், ஒப்புதலுக்காக மாநில அரசுகளால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்படுவதாகவும், மாநில அரசுகளின் நலனைக் கருத்தில்கொண்டே இந்த காலக்கெடு நடைமுறையை செயல்படுத்துவதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கூறிய காலக்கெடுவைப் பின்பற்றி, ஆளுநரிடம் இருந்து ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது 3 மாத காலத்திற்குள் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒரு வேளை மசோதா மீது முடிவெடுக்க 3 மாத காலத்திற்கு மேல் நேரம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், தாமதத்திற்கான காரணங்களை விளக்கி மாநில அரசுகளிடம் தெரிவிக்கவேண்டும் என்றும், மசோதாக்கள் மீது மத்திய அரசு எழுப்பும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் மாநில அரசுகள் விளக்கமளிக்கவேண்டும்.

எந்தவொரு மசோதாக்களையும் நிராகரிக்க (absolute veto) ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. இதே நெறிமுறை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 201-ன் கீழ், குடியரசுத் தலைவருக்கும் எதனால் பொருந்தாது என்பதை விளக்க எங்களிடம் எந்த காரணமும் இல்லை.

அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விதிக்கு, குடியரசுத் தலைவரும் விலக்கல்ல. அரசியலமைப்புப் பதவியான இந்த இரண்டிற்கும் இத்தகைய கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 201-ன் கீழ், ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நாங்கள் நிர்ணயித்த காலக்கெடுவைத் தாண்டி குடியரசுத் தலைவர் முடிவெடுக்கவில்லை என்றால், சம்மந்தப்பட்ட மாநில அரசு ரீட் மனுவைத் தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.

மசோதாக்கள் மீது முடிவெடுப்படுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவர் தெரிவிக்கும் விளக்கம் மிகவும் முக்கியமானது.

அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும்போது, தங்களது அதிகாரங்களை குடியரசுத் தலைவரும், மத்திய அரசும், நேர்மையான முறையில் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள் என்ற முடிவுக்கு வருவதில் நீதிமன்றத்திற்கு எந்த தடையும் இல்லை’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in