
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இத்தகைய நடவடிக்கை பாதுகாப்பு படையினரை சோர்வடையச் செய்துவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் (ஏப்.22) நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிடுமாறு ஹதேஷ் குமார் சாஹூ என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதி சூர்யகாந்த் மேற்கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, `இதுபோன்ற பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு முன்பு பொறுப்புணர்வுடன் இருங்கள். நாட்டிற்கென்று உங்களுக்கு சில கடமைகள் உள்ளன. இது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஒவ்வொரு இந்தியரும் கைகோர்த்திருக்கும் முக்கியமான தருணம். படைகளை மனச்சோர்வடையச் செய்யாதீர்கள். பிரச்னையின் வீரியத்தைப் பாருங்கள்’ என்றார்.
மேலும், `நீதிபதிகளின் பணி தகராறுகளின்போது முடிவெடுப்பதே தவிர, விசாரணைகள் மேற்கொள்வது அல்ல. எப்போது இருந்து நாங்கள் புலனாய்வில் நிபுணத்துவம் பெற்றோம்? ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கச் சொல்கிறீர்கள். அவர்களால் தீர்ப்பு மட்டுமே வழங்க முடியும். எங்களை உத்தரவு பிறப்பிக்கச் சொல்லாதீர்கள்’ என்று கூறி மனுதாரரை நீதிபதி கடிந்துகொண்டார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் மனுதாரர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். மத்திய அரசு சார்பில் விசாரணையின்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, `இதுபோன்ற மனுக்கள் உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யக்கூடாது’ என்றார்.