
அமைச்சர் பதவியில் தொடர விருப்பம் உள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு செந்தில் பாலாஜி பதிலளிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல என்று அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், 10 நாட்களுக்குள் இது தொடர்பாக பதிலளிக்குமாறு அவருக்கு அவகாசம் வழங்கியுள்ளது.
2011 முதல் 2015 வரை போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்குகள் பதியப்பட்டன.
இந்த வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2023 ஜூன் 14 அன்று செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 471 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு, கடந்தாண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்பட்டு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தார்
இதைத் தொடர்ந்து செப்.29 அன்றும் மீண்டும் அமைச்சராக அவர் பதவியேற்றுக்கொண்டார். அதன்பிறகு, செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக கூறப்படும் வித்யா குமார் என்பவர், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது, அமைச்சர் பதவியில் தொடர விருப்பம் உள்ளதா என்று ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்விக்கு செந்தில் பாலாஜி இதுவரை பதிலளிக்கவில்லை என்றும், நீதிமன்றத்தால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தொடர்ந்து இதுபோல பதிலளிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல என்று கூறி அதிருப்தி தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து, 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.