வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

வாக்குச் சீட்டு முறைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை வாக்கு ஒப்புகைச் சீட்டுகளோடு முழுமையாக ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகள், வாக்கு ஒப்புகைச் சீட்டோடு 100 சதவீதம் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும், பழைய வாக்குச் சீட்டு முறைக்குச் செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தத்தா, இதுதொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்கள். வாக்குச் சீட்டு முறைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சின்னங்களைப் பதிவேற்றும் அலகுகளுக்கு வாக்குச் சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்க வேண்டும். இதை 45 நாள்களுக்குப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து 7 நாள்களுக்குள் வாக்காளர்கள் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை வைத்தால், பொறியாளர்களைக் கொண்டு வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாக்கை சரிபார்க்க வேட்பாளர் கோரிக்கை வைத்தால், அதற்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவேளை வாக்கு இயந்திரத்தில் வாக்குகள் மாற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கட்டணம் வேட்பாளர்களுக்குத் திருப்பி செலுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in