
சாவர்க்கருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு, உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்.25) கண்டனம் தெரிவித்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துக்களை நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், இவ்வாறு மீண்டும் நடந்துகொண்டால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே தொடர்ந்த அவதூறு வழக்கில் தனக்கு எதிரான சம்மனை ரத்துசெய்ய மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலாம் அகோலா மாவட்டத்தில், கடந்த நவம்பர் 17, 2022 அன்று நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையை ஒட்டி நடைபெற்ற பேரணியில், சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்திடம் இருந்து ஓய்வூதியம் பெற்ற "பிரிட்டிஷ் வேலைக்காரன்" என்று சாவர்க்கரை, ராகுல் காந்தி குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, பேரணியில் கூறப்பட்ட இத்தகைய கருத்துக்கள் மூலம், இரு பிரிவினருக்கு இடையே பகைமையைத் தூண்டும் எந்தவிதமான நோக்கமும் அவருக்கு இல்லை என்று ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
அதற்கு, `உங்கள் உண்மையுள்ள வேலைக்காரன்’ என்ற வாக்கியத்தை மகாத்மா காந்தி பயன்படுத்தியது உங்கள் கட்சிக்காரருக்கு தெரியுமா? அவரது பாட்டி (இந்திரா காந்தி) சாவர்க்கருக்கு கடிதம் அனுப்பியது அவருக்குத் தெரியுமா?’ என்று கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்ற அமர்வு அதிருப்தியை வெளிப்படுத்தியது.
மேலும், ஒரு அரசியல் தலைவராக இருந்துகொண்டு, இதைப்போன்ற கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்று ராகுல்காந்திக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க ஒப்புக்கொண்டாலும், அவர் இதுபோன்ற கருத்துக்களை மீண்டும் தெரிவிக்கக்கூடாது என்று தெளிவுபடுத்தியது. ஒருவேளை மீண்டும் இவ்வாறு நடந்துகொண்டால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவருக்கு நீதிமன்றத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.