பெண் கடத்தல் வழக்கு: ஹெச்டி ரேவண்ணா கைது

ரேவண்ணாவின் இடைக்கால ஜாமீன் சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
பெண் கடத்தல் வழக்கு: ஹெச்டி ரேவண்ணா கைது
ANI
1 min read

பெண் கடத்தல் வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் மகன் ரேவண்ணா சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொளி விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கர்நாடக அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா இதுவரை விசாரணைக் குழு முன் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகிய இருவரும் இடைக்கால ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். ஆனால், இவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனிடையே, ரேவண்ணா வீட்டில் பணிபுரிந்த பெண் பணியாளர், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் மைசூரு கேஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய காணொளிகள் வெளியானதிலிருந்து தனது தாயார் காணவில்லை என அவர் புகார் அளித்துள்ளார். ரேவண்ணா மற்றும் பாபண்ணா என்று அறியப்படும் அவரது உதவியாளர் மீது கடத்தல் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேஆர் நகர் காவல் துறையினர் ரேவண்ணாவை முதல் குற்றவாளியாகவும், பாபண்ணா என்று அடையாளம் காணப்பட்ட மற்றொருவரை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்துள்ளார்கள்.

இந்த வழக்கில் தேவெகௌடா இல்லத்தில் இருந்து ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு நேற்று கைது செய்தது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணும் கர்நாடக காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

ரேவண்ணாவின் இடைக்கால ஜாமீன் சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவர் சிறப்பு விசாரணைக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in