
நாளை (மே 7) நாடு தழுவிய நிலையில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதாக செய்தி வெளியான நிலையில், ஒட்டுமொத்தமாக 244 இடங்களில் இது நடைபெறுவதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்.22-ல் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 244 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில், சென்னை மற்றும் கல்பாக்கம் என இரு இடங்களில் நடைபெறவுள்ளது.
மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், உ.பி. ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற நாடுகளுடன் எல்லையைக் கொண்டுள்ள மாநிலங்களில் அதிகமான இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவது தெரியவந்துள்ளது.
அந்நிய நாட்டு ராணுவம் திடீர் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பயிற்சி வழங்குவதற்காக, இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போர்க்காலங்களின்போது எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து காவல்துறையினர், ஊர்காவல் படையினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பொது மக்களுக்கு சிறப்புப் பயிற்சியை வழங்கவுள்ளனர்.
இத்தகைய சூழல்களில் மின்னணு சாதனங்கள் பழுதடைந்தால் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்றும், வீடுகளில் முதலுதவிப் பெட்டிகள், டார்ச் லைட்டுகள், மெழுகுவர்த்திகள், பணம் ஆகியவற்றை மக்கள் பத்திரமாக வைத்திருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.