தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியதற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான சட்டத்தில், தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டார். புதிய சட்டத்தின்படி பிரதமர், மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சேர்க்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் (ஏடிஆர்) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தற்போது பதவியில் உள்ளார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். இவருடைய பதவிக்காலம் 2027 வரை உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த சனிக்கிழமை இவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். இரு தேர்தல் ஆணையர் பதவிகள் தற்போது காலியாக உள்ளன.
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு ஏடிஆர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஏடிஆர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணிடம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமிருந்து செய்தி வந்துள்ளதாகவும், வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.