நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யமுடியாது: பெகாசஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

அவர்களிடம் உளவு மென்பொருள் இருக்கிறதா என்பதுதான் அடிப்படையான கேள்வி. அப்படி இருந்தாலும், அதை தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க எதுவுமே இல்லை.
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யமுடியாது: பெகாசஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
1 min read

உளவு மென்பொருள் ஒரு நாட்டில் இருப்பதிலோ பாதுகாப்பிற்காக அது பயன்படுத்தப்படுவதிலோ தவறில்லை; நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யது கொள்ளமுடியாது என்று பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் நாட்டின் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் கைப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாக கடந்த 2021-ல் செய்திகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

விசாரணை நிறைவுபெற்றதும் உச்ச நீதிமன்றத்தில் நிபுணர் குழு சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், ஆய்வு செய்யப்பட்ட எந்த ஒரு கைபேசியிலும் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே அதே ஆண்டில் பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அந்த மனுக்கள் தொடர்பான விசாரணையை நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கே. சிங் அமர்வு இன்று மேற்கொண்டது.

மனுதாரர்கள் சிலர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவேதி, `அவர்களிடம் (மத்திய அரசு) உளவு மென்பொருள் இருக்கிறதா என்பதுதான் அடிப்படையான கேள்வி. அவர்களிடம் அது இருந்தாலும், அதை தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க எதுவுமே இல்லை’ என்றார்.

அதற்கு, ` ஒரு நாடு உளவு மென்பொருளை வைத்திருப்பதிலோ பாதுகாப்பிற்காக அது பயன்படுத்தப்படுவதிலோ தவறில்லை; ஆனால் யாருக்கு எதிராக அது பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி.. அது அவ்வளவு எளிமையாக இருக்காது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யது கொள்ளமுடியாது’ என்றார்.

மத்திய அரசு சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். வாதங்கள், பிரதிவாதங்களுக்குப் இந்த வழக்கு மீதான விசாரணை ஜூலை 30-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in