அயலக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சாம் பித்ரோடா விலகல்

"சாம் பித்ரோடா ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டுள்ளார்."
அயலக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சாம் பித்ரோடா விலகல்
ANI

அயலக காங்கிரஸ் தலைவர் பதவியை சாம் பித்ரோடா ராஜினாமா செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அயலக காங்கிரஸ் தலைவராக இருக்கும் சாம் பித்ரோடா ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர். அண்மையில் இவர் பேசி வரும் கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடிக்க, பாஜகவினர் அவரது கருத்தைக் கொண்டு காங்கிரஸ் மீது தேர்தல் பிரசாரங்களில் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

சாம் பித்ரோடா கடந்த மாதம் அளித்த நேர்காணல் ஒன்றில், அமெரிக்காவில் சில மாகாணங்களில் நடைமுறையில் இருக்கும் வாரிசுரிமை வரி குறித்து பேசினார்.

இவருடையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் வாரிசுரிமை வரி முறையைக் கொண்டு வருவதுதான் காங்கிரஸின் திட்டம் என்று பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவினர் விமர்சனங்களை வைத்தார்கள். எனினும், இது சாம் பித்ரோடாவின் கருத்து என்றும், காங்கிரஸுக்கும் இந்தக் கருத்துக்கும் தொடர்பில்லை என்றும் கட்சித் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், தி ஸ்டேட்ஸ்மேனுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து விளக்கமளித்த சாம் பித்ரோடா இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பேசினார்.

சாம் பித்ரோடா பேசியதாவது:

"மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அங்கும், இங்கும் நடக்கும் சில சண்டைகளை விட்டுவிடுவோம். பலதரப்பட்ட இந்தியாவை ஒரு நாடாக ஒன்றிணைத்து வைத்திருக்க முடியும். அங்கு கிழக்கில் இருப்பவர்கள் சீனர்களைப்போல இருப்பார்கள், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போல இருப்பார்கள். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப்போல இருப்பார்கள். தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப்போல இருப்பார்கள்.

இந்திய மக்கள் வெவ்வேறு மொழிகள், மதம், உணவுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள். அந்த இந்தியாவில்தான் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அங்கு அனைவருக்கும் இடம் உண்டு. அனைவரும் சற்று சமரசமும் செய்து கொள்கிறார்கள்" என்றிருக்கிறார் அவர்.

மக்களை தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பா என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மீண்டும் இவரது கருத்தைக் கொண்டு இன்று காலை முதல் விமர்சிக்கத் தொடங்கினார்கள். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதற்கு எக்ஸ் தளத்தில் விளக்கம் தந்தார்.

ஜெய்ராம் ரமேஷின் விளக்கப் பதிவு:

"போட்காஸ்ட் ஒன்றில் இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பித்ரோடா செய்த ஒப்பீடுகள் மிகவும் துரதிருஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்தக் கருத்துக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சாம் பித்ரோடா காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்புடைய பதிவில் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளதாவது:

"அயலக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக சாம் பித்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் முடிவு செய்துள்ளார். இவருடைய ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் (மல்லிகார்ஜுன கார்கே) ஏற்றுக்கொண்டுள்ளார்" என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in