மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலால் சுமார் 49.18 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!
ANI
1 min read

பிரதமர் மோடி தலைமையில் இன்று (அக்.16) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியின் உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசின் சில முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்குமான அகவிலைப்படி உயர்வுக்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்த செய்திக்குறிப்பு வெளியானது.

இதன்படி, உயர்ந்து வருகின்ற விலைவாசிக்கு ஈடுகொடுக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டுவரும் அகவிலைப்படி 1 ஜூலை 2024 முதல், 3 சதவீதம் அளவுக்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால், ஆண்டொன்றுக்கு மத்திய அரசுக்குக் ரூ. 9,448 கோடி கூடுதலாக செலவாகும் என்று கூறப்படுகிறது.

பணவீக்கத்தால் ஏற்படும் பண மதிப்பு வீழ்ச்சி வாழ்க்கை செலவுகளில் ஏற்படுத்தும் பாதிப்பை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான முடிவு 7-வது மத்திய ஊதியக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும், இதனால் சுமார் 49.18 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் எனவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு பின்தேதியிட்டு ஜூலை 2024 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in