
ஜூலை 23-ல் இந்த ஆண்டு நடந்த மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்குப் போதுமான முகாந்திரம் இல்லை என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட இயற்பியல் கேள்வி ஒன்றுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து நீட் தேர்வு முடிவுகளைப் புதிதாக வெளியிடுமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.
கடந்த மே 5-ல் நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நீட் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த இயற்பியல் குறித்த 29-ம் எண் கேள்விக்கு, இரு சரியான விடைகளை இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அந்தக் கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கியது தேசிய தேர்வு முகமை.
நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இயற்பியல் கேள்விக்கான கருணை மதிப்பெண் விவகாரம் எழுப்பப்பட்டது. இதை தொடர்ந்து கேள்விக்கான சரியான ஒரே ஒரு விடையை வழங்குமாறு தில்லி ஐஐடி-யிடம் கோரிக்கை வைத்தது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று 29-ம் எண் இயற்பியல் கேள்விக்குச் சரியான ஒரே ஒரு விடையை உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது தில்லி ஐஐடி. இந்தக் கேள்விக்கான பதிலை முன்வைத்து நீட் தேர்வு முடிவுகளைத் திருத்தி வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் ஜூலை 23-ல் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று (ஜூலை 25) நீட் தேர்வு முடிவுகளைத் திருத்தி புதிய முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.