
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை குறித்து சண்டிகர் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சண்டிகரில் இன்று (மே 10) குவிந்தனர்.
சண்டிகரின் துணை ஆணையர் சார்பில், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் எக்ஸ் தளக் கணக்கில் நேற்று (மே 9) வெளியிடப்பட்ட பதிவில் கூறியதாவது,
`இளைஞர்களுக்கு அழைப்பு; நாட்டை காக்கத் தயாராகுங்கள்.
`சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக’ இணைந்து, அவசரகால தயார்நிலைக்கு ஒத்துழைப்பு வழங்க 18 வயதுக்கும் மேற்பட்ட இளம் குடிமக்களுக்கு சண்டிகர் நிர்வாகம் அழைப்பு விடுக்கிறது. மே 10, காலை 10.30 மணியளவில் தாகூர் திரையரங்கத்தில் கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
முன்னெடுப்பில் இணைந்து, பயிற்சி பெறுங்கள்; மிகவும் அவசியமான நேரத்தில் சேவை செய்யுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று (மே 10) காலை 10 மணிக்குத் தொடங்கி, சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாகப் பதிவுசெய்துகொள்ள பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் தாகூர் திரையரங்கம் அமைந்துள்ள பகுதியில் திரளத் தொடங்கினர். பாகிஸ்தானுக்கு எதிராகவும், நாட்டிற்காக உயிரை கொடுக்கத் தயார் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த இளைஞர்களில் பலர் தேர்வு செய்யப்பட்டதும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அதே இடத்திலும், திரங்கா பூங்காவிலும் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.