
மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயிலின்படி அவரது அதிகப்படியான சொத்துகள், தொண்டு நிறுவனங்களுக்குச் செல்லவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, கடந்தாண்டு 9 அக்டோபர் 2024 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
மரணத்திற்கு முன்பு கடைசியாக 23 பிப்ரவரி 2022 அன்று, தன்னுடைய சொத்துக்களில் யாருக்கெல்லாம் பங்கு கிடைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு அவர் உயில் எழுதி இருந்தார். இந்நிலையில், அவரது உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளவை தொடர்புடைய விவரங்களை எகனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
உயிலின் தொடக்கத்தில், `இதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு ஒருவர் சென்றால், அந்த நபருக்கு (உயிலில்) வழங்கப்பட்ட அனைத்துவிதமான உரிமைகளும், சலுகைகளும் திரும்பப் பெறப்படும். எனது சொத்தின் எந்த பங்கிலும் அந்த நபருக்கு எந்த உரிமையும் கிடையாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ. 3,800 கோடி மதிப்புடைய ரத்தன் டாடாவின் சொத்துகளில் பெரும் பங்கு, ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் பவுண்டேஷன் மற்றும் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் டிரஸ்ட் ஆகிய இரு தொண்டு நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரூ. 800 கோடி மதிப்பிலான சொத்துகள், பங்குகள், வங்கி வைப்புத் தொகைகள் போன்றவற்றை தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் ஜெஜீபாய் மற்றும் டீனா ஜெஜீபாய் ஆகியோருக்கு ரத்தன் டாடாவால் உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனது நெருங்கிய நண்பரான மெஹ்லி மிஸ்திரிக்கும், சகோதரர் நேவல் டாடாவுக்கும், முன்னாள் டாடா ஊழியர் மோஹினி மோஹன் தத்தாவுக்கும், ரத்தன் டாடா சொத்தில் பங்கு வழங்கியுள்ளார். மேலும், தனது செல்லப் பிராணிகளுக்காக ரூ. 12 லட்சத்தை ஒதுக்கியுள்ள ரத்தன் டாடா, அவற்றின் பராமரிப்புக்காக ஒவ்வொரு காலாண்டிலும் ரூ. 30,000 வழங்க உயில் எழுதியுள்ளார்.