ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.
ஏற்கெனவே ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக ஷபீர் என்பவர் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியது முசாவீர் ஷாஸீப் ஹூசைன் மற்றும் அப்துல் மதீன் தாஹா என என்ஐஏ கண்டறிந்தது. இருவரையும் என்ஐஏ தேடி வருகிறது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதானவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் பாஜக நிர்வாகி சாய் பிரசாத்திடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.