

ராஜஸ்தானில் நிகழ்ந்த வேன் விபத்தில் பக்தர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பலோடி மாவட்டம். இந்த மாவட்டத்தின் பாரத் மாலா நெடுஞ்சாலையில் மடோடா கிராமம் அருகே விபத்து நேர்ந்துள்ளது.
சுற்றுலா வேனில் 18 பேர் பயணித்துள்ளார்கள் எனத் தெரிகிறது. இவர்களில் 4 முதல் 5 பேர் குழந்தைகள். இவர்கள் கோலாயத்துக்குப் புனித பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இது பிகானெர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இங்கிருந்து ஜோத்பூரிலுள்ள சுர்சாகருக்குத் திரும்பி வரும்போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய ரக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஜோத்பூர் காவல் ஆணையர் ஓம் பிரகாஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"15 பேர் உயிரிழந்துள்ளார்கள். இருவர் படுகாயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் முதலில் முதற்கட்ட சிகிச்சைக்காக ஓசியன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். பிறகு, ஜோத்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழு உதவி வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் அரசு துணை நிற்பதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"வேனில் 4, 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் கோலாயத்துக்குச் சென்றார்கள். எனது குடும்பத்தினரும் அந்தப் பேருந்தில் இருந்தார்கள். இவர்களில் எனது சகோதரர் மற்றும் மகனின் மனைவிகளும் அடக்கம்" என்றார்.
அண்மையில் தான் ஜெய்சால்மீரில் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தார்கள். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டது.
Fifteen people were killed and two others injured after a tempo-traveller coming from Kolayat, Bikaner, collided with a parked trailer on the Bharat Mala Highway in Phalodi, officials said on Sunday.
Rajasthan | Accident | Phalodi | Tempo-Traveller |