20 ஆண்டுகள் கழித்து கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்: பின்னணி என்ன?

மஹாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அரிதிலும் அரிதான சந்திப்பு, தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
20 ஆண்டுகள் கழித்து கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்: பின்னணி என்ன?
1 min read

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள வோர்லியில் நடைபெறும் பேரணியில், ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழித்து ஒன்றுவிட்ட சகோதரர்களான உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றாக கலந்துகொண்டனர்.

தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி, மாநில பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாவது கட்டாய பயிற்று மொழியாக மஹாராஷ்டிர அரசு அண்மையில் அறிவித்தது. ஆனால் இதற்கு மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களை தாக்கரே சகோதரர்கள் தனித்தனியாக முன்னெடுத்தனர்.

இதனால், ஹிந்தியை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்த முடிவை மஹாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து மாநில அரசின் முடிவைக் கொண்டாட, இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ஒன்றுவிட்ட சகோதரர்களாக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இன்று (ஜூலை 5) ஒன்றாக இணைந்து, வோர்லியில் நடைபெறும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

மஹாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அரிதிலும் அரிதான சந்திப்பு, தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. இரு சகோதரர்களும் அரசியல் ரீதியாக பின்னடைவைை சந்தித்துள்ள நிலையில், அவர்களின் வளர்ச்சிக்கு இந்த இணைப்பு மிகவும் அவசியமானதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா மற்றும் சிவசேனா (உத்தவ்) கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன், மராத்தி மொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்லவர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in