காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார்.
தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், பொருளாளர் அஜய் மாகென் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் மார்ச் 17-ல் நிறைவடைவதாக அவர் அறிவித்தார். நிறைவு விழாவின்போது இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார்.
இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் அடங்கிய கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டார். இதில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இந்த முறையும் அதே தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். கடந்த முறை வயநாடு தொகுதியில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா வயநாடு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல் ராஜ்நந்தகான் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் கண்ணூரிலிருந்து போட்டியிடுகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆலப்புழாவில் போட்டியிடுகிறார். சசி தரூர் திருவனந்தபுரத்தில் மீண்டும் போட்டியிடுகிறார்.