மினிமம் பேலன்ஸ் அபராதமாக 5 ஆண்டுகளில் ரூ. 8,500 கோடி வசூல்: ராகுல் விமர்சனம்

கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 2,331 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
மினிமம் பேலன்ஸ் அபராதமாக 5 ஆண்டுகளில் ரூ. 8,500 கோடி வசூல்: ராகுல் விமர்சனம்
1 min read

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதமாக பொதுத் துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 8,500 கோடியை வசூலித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அபராதமாக வசூலிக்கப்படும் இந்தத் தொகையின் அளவு 34 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இவர் தாக்கல் செய்த தரவுகள் மூலம் 2019-20 நிதியாண்டு முதல் 2023-24 நிதியாண்டு வரை பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையைக் கடைப்பிடிக்க முடியாத வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 8,500 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி 2019-20 நிதியாண்டுக்குப் பிறகு குறைந்தபட்ச இருப்புத்தொகையைக் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை நிறுத்திவிட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் இதை விமர்சித்து பதிவிட்டுள்ளதாவது:

"நரேந்திர மோடியின் அமிர்த காலத்தில், வெகுஜன இந்தியர்களின் காலி பாக்கெட்டிலிருந்தும் பணம் எடுக்கப்படுகிறது. தொழில் துறையினர்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்த அரசு, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் கடைப்பிடிக்க முடியாத ஏழை இந்தியர்களிடமிருந்து ரூ. 8,500 கோடியை வசூலித்துள்ளது.

வெகுஜன மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியாக மோடியின் சக்கரவியூகத்தின் வாயிற்கதவுதான் வங்கிகளின் இந்த 'அபராத முறை'. ஆனால், இந்திய மக்கள் அபிமன்யு அல்ல, அர்ஜுனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுடைய சக்கரவியூகத்தை முறியடித்து, அட்டூழியங்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in