காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதியளித்துள்ளார்.
இன்றைய சூழலில்கூட நாட்டில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே வேலைபுரிபவராக உள்ளார். அரசுப் பணிகளைப் பொறுத்தவரை 10-ல் ஒருவர் மட்டுமே அரசுப் பணிகளில் பணிபுரிந்து வருகிறார்கள் என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இந்திய மக்கள்தொகையில் பெண்கள் 50% இருக்கமாட்டார்களா? உயர்கல்வியில் 50% பெண்கள் இருக்கமாட்டார்களா? அப்படி இருக்கும்போது, நம்முடைய கட்டமைப்பில் அவர்களுடைய பங்கு ஏன் இன்னும் குறைவாகவே இருக்கிறது. அரசாங்கத்தில் பெண்களின் பங்களிப்பு சரிசமமாக இருந்தால் மட்டுமே பெண்களின் முழுத் திறனைப் பயன்படுத்த முடியும். எனவே, புதிய அரசுப் பணிகள் அனைத்திலும் பெண்களுக்கென்று 50% இடங்கள் ஒதுக்கப்படும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவுள்ளோம். அரசுப் பணிகளில் 50% பெண்கள் இருப்பது நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் வலிமையை சேர்க்கும். வலிமையான பெண்கள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவார்கள்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.