இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை எதிர்க்கும் பிரதமர்: பிடிஆர் பதில்!

இலவசப் பேருந்துச் சேவையால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதை நிரூபிக்க முடியுமா?
இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை எதிர்க்கும் பிரதமர்: பிடிஆர் பதில்!
ANI
1 min read

இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை விமர்சனம் செய்துள்ள பிரதமர் மோடிக்குத் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் அமலில் உள்ளது. இதற்குப் பிறகு இன்னும் சில மாநிலங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை விமர்சனம் செய்துள்ளார் பிரதமர் மோடி. இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை வழங்குகின்றன. இதன் காரணமாக மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்துவது 50% குறைந்துவிட்டது. பேருந்துகளில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுப்புறச் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மெட்ரோ சேவை எப்படி வளரும், நாடு எப்படி முன்னுக்கு வரும் என்றார்.

இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை விமர்சனம் செய்த பிரதமருக்குத் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எக்ஸ் தளத்தில் பதில் கூறியதாவது:

உலகில் எங்காவது பேருந்துச் சேவை இல்லாமல் மெட்ரோ சேவை மட்டும் உள்ளதா? பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்துவர்களுக்குச் சலுகை அளிக்காத நாடு ஏதேனும் உள்ளதா? இலவசப் பேருந்துச் சேவையால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதை நிரூபிக்க முடியுமா? சென்னையின் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பல ஆண்டுகளாக மத்திய அரசு நிதி தராதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in